
புத்தக நேசிகளின் நட்பு எனக்கு பரிச்சயமான ஒன்று. என் படுக்கை அறையில் என்னோடு உறங்கும் அளவு நெருக்கம் கொண்ட ஒரே தோழன் புத்தகங்கள் மட்டுமே. நேசித்ததலோ என்னவோ தோழிகளின் பரிசளிப்பில் புத்தகங்களின் வருகை குறைவு. (அது வீணான செலவு என்று எண்ணுவோர் பலர்.) புத்தகப் பரிசு என் வாழ்வில் நான் ருசிக்காத கனி. நானே யார்க்கும் இது வரை புத்தகங்கள் பரிசளிததில்லை. காரணமறியேன். அவற்றை பொக்கிஷங்களாய் மட்டுமேயன்றி பரிசு பொருளாய் அளிக்க எனக்கு மனமில்லை(அது தவறென உணர வைத்தது புது நட்பு).
முதன் முதலாய் பரிசுபொருளாய் என் புத்தகவரவில் முதலிடம் கண்டது “துணையெழுத்து”. அவ்வகையில் இத்துணையெழுத்து என் இனிய நினைவுகளின் பக்கங்களில் “முதலெழுத்து”.

ஜெயகாந்தன், ரமணிச்சந்திரன், சுஜாதா என்று நான் நேசித்த எழுத்தாளர் வட்டத்துக்குள் s.ராமகிருஷ்ணன் என்ற தொடர்புள்ளி இணைந்திருப்பது இனிமை. “விருப்பங்கள் கலையும் போது மிஞ்சுவதெல்லாம் அவமதிப்பு தான்” என்ற முதல் வாசகதிலிருந்து இறுதி பக்க புகைப்பட புன்னகை வரை எழுத்தாளரின் தனித்துவம்.
சைதாபேட்டை கழுதையிலிருந்து ஜிம் கார்பெட்டின் நைனிடால் ஏரி வரை நம் தடம் பதித்த உணர்வு படித்து முடிக்கும் போது. இயல்பான வாழ்கை அனுபவங்களை அதீத வாழ்வியல் தத்துவத்தோடு அதன் சுவை குறையாமல் அளித்திருப்பது எழுத்தாளரின் சிறப்பு.

இழந்த நட்பு, தவறிய வாய்ப்பு, மறந்து போன உறவுகள், யோசிக்க மறந்த பிழைகள், சந்தித்த உறவுகள், அனுபவிக்க தவறிய இனிமைகள் இவ்வனைத்து உணர்வுகளின் ஒரு நித்ய தொகுப்பு.
இதுநாள் வரை வாங்கிய பொருளின் மதிப்பு இரட்டிபாகிபோனது தங்கத்தில் மட்டுமே உணர்ந்திருக்கிறேன். படித்து முடிக்கும் போது பன்மடங்காய் உணர்ந்தேன். துணையெழுத்தையும் + பரிசளித்தவரின் நட்பையும்.














